செய்திகள்
சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு- தென்மண்டல ஐஜி தகவல்
சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டிருப்பதாக தென்மண்டல ஐஜி தெரிவித்தார்.
மதுரை:
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் மண்டல ஐ.ஜி.யாக இன்று பொறுப்பேற்ற முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவல்துறையில் ஆங்காங்கே குறைகள் இருக்கலாம், மறுக்கவில்லை. லாக்கப் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் நிலைப்பாடு. லாக்கப் மரணங்களை தவிர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக காவல்துறையினருக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரின் வேண்டுகோளின்படி அவருக்கு ஊதியத்துடன் ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவலர் ரேவதிக்குத் தேவையான பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. தேவையான உதவியும் வழங்கப்படும். சிபிசிஐடி போலீசாருக்கு உள்ளூர் போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.