செய்திகள்
கைது

பிரம்மபுரத்தில் சித்தா டாக்டரை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

Published On 2020-06-29 12:01 GMT   |   Update On 2020-06-29 12:01 GMT
பிரம்மபுரத்தில் சித்தா டாக்டரை மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி:

காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர், அதே பகுதியில் சித்தா கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஆங்கில மருத்துவம் பார்த்ததாக வந்த புகாரை அடுத்து காட்பாடி போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

இந்த தகவல் அறிந்த 4 பேர் நேற்று முன்தினம் அவருடைய கிளினிக்குக்கு சென்றனர். அப்போது அவரிடம் நாங்கள் பத்திரிகை நிருபர்கள். நீங்கள் ஆங்கில மருத்துவம் பார்த்ததை பத்திரிகையில் செய்தி போடாமல் இருப்பதற்காக ரூ.40 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் அவ்வளவு கொடுக்க முடியாது என ரூ.12,500 கொடுத்துள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அது உண்மை என தெரியவந்தது. இதுகுறித்து விஜயகுமாரி காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஆனந்த சீனிவாசன், பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ், விஜயகுமார், தென்னரசு ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News