செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவாரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-06-29 09:25 GMT   |   Update On 2020-06-29 09:25 GMT
திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 341 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஏற்கனவே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நன்னிலம், குடவாசல் அரசு மருத்துவமனைகள், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக தனி கட்டிடம், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டிடம் என கொரோனா சிகிச்சை மையங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி ராஜகோபாலசாமி கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று மன்னார்குடி-26, நன்னிலம்-21, வலங்கைமான்-10, திருவாரூர்-10, குடவாசல்-19 உள்பட 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 428 ஆக உயர்ந்துள்ளது. இதில் 142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News