செய்திகள்
கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-கார் திருடிய 2 பேர் கைது

Published On 2020-06-17 16:14 GMT   |   Update On 2020-06-17 16:14 GMT
திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-கார் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம், ஆப்பரக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது44). இவருடைய மனைவி சுமதி(38) இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுடைய வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் காரை கடந்த ஆண்டு (2019) மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ராஜேந்திரன், குணசேகரன் மற்றும் ஆலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் காரை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி கே.கே.நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தஞ்சை நோக்கி சென்ற காரை வழிமறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதில் வந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு தென்திருப்பாசேத்தியை சேர்ந்த பாலமுருகன் (29), திருவாரூர் சாமிமடத்தெருவை சேர்ந்த வினோத்குமார்(35) ஆகியோர் என்பதும், இவர்கள் வந்த கார் ஆசிரியர் தம்பதிக்கு சொந்தமானது என்பதும், இவர்கள் தான் ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை மற்றும் காரை திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது. பின்னர் 2 பேரும் திருத்துறைப்பூண்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து திருத்துறைப்பூண்டி போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News