செய்திகள்
கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சையில் குணமடைந்த திருச்சி ஆயுள் தண்டனை கைதி

Published On 2020-06-02 08:11 GMT   |   Update On 2020-06-02 08:11 GMT
கொரோனா சிகிச்சையில் குணமடைந்த திருச்சி மத்திய சிறை கைதி, தேனி வாலிபர் உள்பட 5 பேர் குணமடைந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி:

திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது திருச்சி ஆஸ்பத்திரியில் திருச்சி மாநகரில் 15 பேர், புறநகரில் 11 பேர், மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைது, தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், சென்னையை சேர்ந்த தாய்-மகள், அரிய லூரை சேர்ந்த திருநங்கைகள் 2 பேர் என 33 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருச்சி மத்திய சிறை கைதி, தேனி வாலிபர் உள்பட 5 பேர் குணமடைந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீதம் உள்ள 28 பேர் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

கைதி குணமடைந்ததை தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் திருச்சி மத்திய ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் அந்த கைதிக்கு தனிமை அறையினை தயார் செய்தனர். இரவு 10 மணிக்கு அவர் திருச்சி ஜெயிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டார். இதையடுத்து அவரை தனி அறையில் அடைத்தனர். அவருடன் சக கைதிகள் தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க தனி காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி ஜெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, திருச்சி மத்திய ஜெயிலில் அந்த ஆயுள் தண்டனை கைதியை தவிர வேறு யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. புழல் ஜெயிலுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்வுக்கு சென்ற அந்த கைதிக்கு மட்டுமே தொற்று உறுதியானது. தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

மருத்துவத்துறையினரின் அறிவுறுத்தலின்படி ஜெயிலில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். ஜெயில் டாக்டர்கள் ஆலோசனைப்படி அவரை கண்காணித்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News