செய்திகள்
அதிக போதைக்காக மதுவில் இருமல் மருந்தை கலந்து குடித்த காவலாளி பலி
அய்யப்பந்தாங்கல் அருகே அதிக போதைக்காக மதுவில் இருமல் மருந்தை கலந்து குடித்த காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை, அய்யப்பந்தாங்கல் லட்சுமி அவின்யூ பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (28). இவர் கே.கே. நகர் அடுத்த விஜயராகவபுரம் 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு கார்த்திகேயன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காவலாளி அறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் கே.கே. நகர் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கார்த்திகேயன் அறையில் காலி மதுபாட்டில்கள் மற்றும் இருமல் மருந்து பாட்டில்கள் கிடந்தன. அதிக போதைக்காக இருமல் மருந்தை மதுவுடன் கலந்து குடித்ததில் கார்த்திகேயன் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக கார்த்திகேயனுடன் தங்கி இருந்த மற்றொரு காவலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.