செய்திகள்
விபத்து பலி

குளித்தலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து செல்போன் கடை உரிமையாளர் பலி

Published On 2020-05-25 11:12 GMT   |   Update On 2020-05-25 11:12 GMT
குளித்தலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து செல்போன் கடை உரிமையாளர் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

நாமக்கல் மாவட்டம், ராமவரம் பகுதியை சேர்ந்தவர் குமரதேவன் (வயது 44). இவர் அப்பகுதியில் சொந்தமாக செல்போன்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது ஊரில் இருந்து சொந்த வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். கரூர் மாவட்டம், குளித்தலை குமாரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரம் குளித்தலை கொல்லம்பட்டறையை சேர்ந்த சையதுஉசேன் மனைவி முகமதுபேகம் (55) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குமரதேவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் முகமதுபேகத்தின் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த குமரதேவனும், முகமதுபேகமும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த முகமது பேகத்தை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும், குமரதேவனை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குமரதேவன் பரிதாபமாக இறந்தார். முகமதுபேகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News