செய்திகள்
தென்னிலை அருகே குடிபோதையில் மொபட்டில் இருந்து விழுந்த எலக்ட்ரீசியன் பலி
தென்னிலை அருகே குடிபோதையில் மொபட்டில் இருந்து விழுந்த எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி:
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள குருக்கத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 39). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் மது குடிப்பதற்காக தனது மொபட்டில் ஊரில் இருந்து கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கருஞ்ஜல்லி வலசு கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக்கடைக்கு வந்தார்.
அங்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்தார். பின்னர் அதே மொபட்டில் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். தொட்டியப்பட்டி அருகே சென்றபோது, குடிபோதையில் இருந்த ராமலிங்கம் நிலைத்தடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமலிங்கம் இறந்தார்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.