செய்திகள்
மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் தகராறு: தொழிலாளியை தாக்கிய 5 பேர் கைது
மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் தகராறில் தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (46) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தம்பிராஜ் வீட்டு முன்பு செல்வம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த செல்வம் தனது நண்பர்களுடன் சேர்ந்து தம்பிராஜை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், கோபி(37), பிரபு (39), புகழேந்தி (28), சந்தோஷ்(45) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.