செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

Published On 2020-05-19 02:01 GMT   |   Update On 2020-05-19 02:01 GMT
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு, ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று விவசாயிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அய்யாக்கண்ணு கோவணம் அணிந்து இருந்தார். மேலும் சில விவசாயிகளும் அரை நிர்வாண கோலத்தில் இருந்தனர். முக கவசம் அணிந்து இருந்த அவர்கள் கையில் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தியதால் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் முன் சாலையில் சமூக இடை வெளியை பின்பற்றி அமர்ந்தனர்.

அவர்கள் கையில் வைத்து இருந்த கோரிக்கை மனுக்களில், கடனோடு பிறந்த விவசாயி கடனிலேயே சாவதோடு தனது வாரிசுக்கும் கடனையே விட்டு செல்கிறான். மத்திய நிதி மந்திரி விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவரது பேட்டியில் அதுபோன்ற அறிவிப்பு எதுவும் இல்லாதது விவசாயிகளை வேதனை அடைய வைத்து உள்ளது.

கொரோனாவிற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் விவசாயிகள் உற்பத்தி செய்த கரும்பு, வாழை எல்லாம் அழிந்து போய்விட்டது. எனவே, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடும், விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. விவசாயிகள் சாலையில் அமர்ந்து இருந்தபோது, கலெக்டரின் கார் வெளியில் இருந்து உள்ளே வந்தது. விவசாயிகளை பார்த்ததும் கலெக்டர் சிவராசு காரை நிறுத்தி அவர்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இந்த மனுக்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். அதன்பின்னரே விவசாயிகள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News