செய்திகள்
பனியன் நிறுவனம் - கோப்புப்படம்

கடந்த 30 நாட்களாக பனியன் நிறுவனங்கள் மூடல் - திருப்பூரில் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

Published On 2020-04-23 11:41 GMT   |   Update On 2020-04-23 11:41 GMT
திருப்பூரில் உள்ள அனைத்து பனியன் நிறுவனங்களும் கடந்த 30 நாட்களாக மூடப்பட்டுள்ள நிலையில் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
திருப்பூர்:

பனியன் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனங்களில் வட மாநிலம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் உலகத்தரம் வாய்ந்தது. இதன் காரணமாக வெளிநாடுகள் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் திருப்பூர் தொழில் துறையினருக்கு ஆர்டர்கள் கொடுக்கிறார்கள்.

அதன்படி ஆடைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே போல் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் திருப்பூரில் ஆடை தயாரிப்பு குளிர் காலம் மற்றும் கோடைக்காலம், குறிப்பிட்ட விளையாட்டு போட்டிகளின் போது குறுகிய கால சீசன் என்பது உள்ளிட்ட பல்வேறு சீசன்களில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நோய் தாக்கத் தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருப்பூரில் உள்ள அனைத்து பனியன் நிறுவனங்களும் மூடப்பட்டது. சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக எந்த உற்பத்தியும் நடைபெறவில்லை.

மேலும் எந்த ஏற்றுமதியும் நடைபெறாததால் நாளொன்றிற்கு ரூ.150 கோடி வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 30 நாட்களில் உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படாததால் ரூ.4ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News