செய்திகள்
அரிசி

தமிழகத்தில் ஒரு மாதத்தில் 3 லட்சம் டன் அரிசி விற்பனை

Published On 2020-04-23 08:51 GMT   |   Update On 2020-04-23 08:51 GMT
ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 3 லட்சம் டன் அரிசி விற்பனையாகி இருக்கிறது. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஏழைகளுக்கு இலவசமாக அரிசி வழங்கி வருகிறார்கள்.
சென்னை:

ஊரடங்கு காலத்தில் அரிசி விற்பனை மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. வழக்கமாக தமிழகத்தில் மாதந்தோறும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் டன் அரிசி விற்பனையாகும். ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 லட்சம் டன் அரிசி விற்பனையாகி இருக்கிறது.

அதாவது 3 மாதத்தில் விற்பனையாகும் அரிசி ஒரே மாதத்தில் விற்று தீர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஊரடங்கு மேலும் நீடித்தால் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சம் காரணமாக கூடுதலாக அரிசி வாங்கி வீடுகளில் இருப்பு வைத்துள்ளனர்.

மேலும் அனைவரும் வீட்டு உணவையே தயாரித்து சாப்பிடுவதால் அரிசி தேவையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ அரிசி பைகளை ஏராளமாக வாங்கி ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் இந்த இலவச அரிசி சப்ளை அதிகளவில் உள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி விற்பனையாளர்கள் சங்க தலைவர் துளசிங்கத்திடம் கேட்டபோது, “அரிசி விற்பனை அதிகரித்து இருப்பது உண்மை. அனைத்து மில்களும் இயங்குகின்றன. தேவையான அளவு வெளிமாநிலங்களில் இருந்து நெல் மற்றும் அரிசி வந்துகொண்டு இருக்கிறது. விற்பனை அதிகரித்தாலும் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு கிடையாது.

இப்போது அதிகளவில் விற்பனையாகி இருப்பது ஊரடங்கு முடிந்த பிறகு வழக்கமான நிலைக்கு திரும்பும்” என்றார்.

Tags:    

Similar News