செய்திகள்
கோவை, நீலகிரியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் கைது
கோவை மற்றும் நீலகிரியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற 2 பேரை கைது செய்தனர்.
சூலூர்:
சுல்தான் பேட்டை அருகே அக்க நாயக்கன் பாளையத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக சுல்தான் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அக்க நாயக்கன்பாளையம் வடக்கு தோட்டத்தில் வெள்ளிங்கிரி (வயது65) என்பவர் தனது தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கரும்பு சக்கரை, சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
இதேபோல் நீலகிரி மாவட்டம் நியூவோப் போலீஸ் நிலையத்திற்கு பெரிய சூண்டி பகுதியில் பழைய சாராய வியாபாரி ஒருவர் கள்ளச்சாராயம் காய்ச்சு விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடலூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனிப்படை போலீசார் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த பழைய சாராய வியாபாரி மணிவேல் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது தோட்டத்தில் இருந்து 15 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஓவேலி பகுதியில் சுமார் 35 லிட்டர் சாராய ஊரல் கைப்பற்றபட்டது குறிப்பிடத்தக்கது.