செய்திகள்
வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தும் போலீஸ்

ஊரடங்கு விதிமீறல்- தமிழகத்தில் 82,752 வழக்குகள் பதிவு

Published On 2020-04-06 08:21 GMT   |   Update On 2020-04-06 08:21 GMT
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதாக இதுவரை 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு பகுதிகளில் கொரோனாவின் தீவிரத்தை உணராமல் பொதுமக்கள் வாகனங்களில் செல்கின்றனர். தடையை  மீறி செல்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்திலும் தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது தமிழகம் முழுவதும் போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தடை உத்தரவை மீறியதாக காவல்துறையால் 90,918 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து 69,589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News