செய்திகள்
ரூ.100 மதிப்பிலான காய்கறி தொகுப்பு பையை வழங்கிய போது எடுத்த படம்.

ஓசூரில் ரூ.100 மதிப்பிலான காய்கறி தொகுப்பு வீடு, வீடாக விற்பனை - பொதுமக்கள் வரவேற்பு

Published On 2020-04-02 14:55 GMT   |   Update On 2020-04-02 14:55 GMT
ஓசூரில் ரூ.100 மதிப்பில் காய்கறி தொகுப்பு வீடு, வீடாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஓசூர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மக்கள் நெருக்கமாக அதிகளவில் கூடி வந்த ஓசூர் உழவர் சந்தை மூடப்பட்டு, ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், பஸ் நிலையம், ராமநாயக்கன் ஏரி அருகே உள்ள பூங்கா ஆகிய இடங்களில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் மக்கள் அதிகளவில் ஒரே இடத்தில் காய்கறிகளை வாங்க கூடுவது தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த உழவர் சந்தைகளில் சமூக இடைவெளியும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது காய்கறிக்காக மக்கள் வெளியே செல்லாத வகையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று காய்கறிகளை வினியோகிக்கும் வகையில் கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில், ரூ.100 மதிப்பிலான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை நேற்று ஓசூரில் வீடு, வீடாக விற்பனை செய்யப்பட்டது.

ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த தொகுப்பில், சமையலுக்கு தேவையான முள்ளங்கி, கேரட், முருங்கைக்காய், பீட்ருட், மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, உள்ளிட்ட 10 காய்கறிகள் அடங்கி இருக்கும்.

இந்த காய்கறி தொகுப்பு பை, உழவர் சந்தைகளில் விற்கப்படுவதில்லை. காய்கறி தேவைப்படுபவர்கள், உழவர் சந்தை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தால், வீட்டுக்கே நேரிடையாக வினியோகிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காய்கறி தொகுப்பு பை முறையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். 
Tags:    

Similar News