செய்திகள்
மதுரையில் ஜவுளிக்கடையில் தீ விபத்து- ரூ.50 லட்சம் துணிகள் நாசம்
ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
மதுரை:
மதுரை தெற்கு வாசல் நவபாஷ்கானா தெருவில் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இதனை அம்சாராம் (வயது 34) என்பவர் நடத்தி வருகிறார்.
இங்கு வழக்கம் போல் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். இரவில் வேலை முடிந்ததும் அனைவரும் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் இரவில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஜவுளி மற்றும் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.
இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.