செய்திகள்
காவிரி காப்பாளன் - எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் வழங்கினர் விவசாயிகள்
திருவாரூரில் நடந்த விவசாயிகள் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ பட்டம் வழங்கப்பட்டது.
திருவாரூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா திருவாரூரில் நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட் கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி ரங்கநாதன் தலைமை தாங்கினார்.
விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், மேடையில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் அனைவரும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடும் என்பதற்காக ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக உரிமைக்குரல் கொடுத்து கொண்டிருந்தோம். அந்த காலகட்டத்தில் போலீசார் பல்வேறு வழக்குகளை எங்கள்மீது பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வழக்குகளை திரும்பப்பெறுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.
இன்றைய தினம் அது முடிவுக்கு வந்துவிட்டது. உங்கள் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் விவசாய சங்க பிரதி நிதிகள் சார்பில் வழங்கப்பட்டது. சட்டப்பூர்வமாக ஒருவரின் நலத்திற்கு பொறுப்பு ஏற்பவர் காப்பாளன். காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நலன் ஏற்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் சட்டம் கொண்டு வந்ததால் ‘காவிரி காப்பாளன்’ பட்டம் வழங்குவதாக காவிரி ரங்கநாதன் கூறினார். மேலும் முதல்-அமைச்சருக்கு வெள்ளியால் ஆன ஏர் கலப்பை, வாள், நெல்லினால் ஆன கோபுரம், நெல் மாலை ஆகியவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.