செய்திகள்
பொதுமக்கள் போராட்டம்

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ் சிறை பிடிப்பு

Published On 2020-03-07 10:02 GMT   |   Update On 2020-03-07 10:02 GMT
ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை காலிக் குடங்களுடன் நாட்றம்பள்ளி-திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் கடந்த 3 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இது குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் பம்ப் ஆபரேட்டரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் அலட்சியமாக பதில் அளித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை காலிக் குடங்களுடன் நாட்றம்பள்ளி-திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் மற்றும் பம்ப் ஆபரேட்டரை இடமாற்றம் செய்ய வேண்டும்.கோடைக்காலம் தொடங்க உள்ளதால் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

போலீசார் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இன்று டிராக்டர் மூலம் உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து சுமார் 1 மணிநேரம் நடந்த மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News