சாத்தான்குளம் அருகே மாமனார்-மாமியார் மீது தாக்குதல்: மருமகனுக்கு வலைவீச்சு
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல்ராஜ் (வயது 65), கூலி தொழிலாளி. இவரது மனைவி கோசலை ராணி. இவர்களது மகள் கவிதா (35) என்பவருக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த செந்தில்வேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் செந்தில்வேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மது குடித்துவிட்டு தினமும் வீட்டில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்றும் அதேபோல் மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கதிர்வேல்ராஜ் மற்றும் கோசலை ராணி செந்தில்வேலிடம் ஏன் தகராறு செய்கிறாய் என தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் செந்தில்வேல், மாமனார் மற்றும் மாமியாரை அவதூறாக பேசி தாக்குதலில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து செந்தில்வேல் தப்பி சென்று விட்டார்.
இது குறித்து கதிர்வேல்ராஜ் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட செந்தில்வேலை வலைவீசி தேடி வருகிறார்கள்.