அரக்கோணம் அருகே ரெயிலில் போலீஸ்காரர், டிக்கெட் பரிசோதகர் மோதல்
அரக்கோணம்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் சென்னையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் திருத்தணியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது38) எஸ்.1 கோச்சில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணம் செய்தார்.
அவரிடம் டிக்கெட் பரிசோதகர் செந்தில்குமார் டிக்கெட்டை கேட்டுள்ளார். ஆனால் சதீஷ்குமார் தான் போலீஸ்காரன் என கூறி அடையாள அட்டைகளை பரிசோதகரிடம் காண்பித்துள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகர் எனக்கு இது தேவையில்லை, டிக்கெட் இருந்தால் காண்பிக்கவும் என கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கு மிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.
ரெயிலிலிருந்து இறங்கிய செந்தில்குமார், சதீஷ்குமார் இருவரும் கைகலப்பு குறித்து ரெயில்வே போலீசில் ஒருவர் மீது ஒருவர் புகார் மனு கொடுத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.