ராஜபாளையம் அருகே கோட்டமலை பகுதியில் காட்டுத்தீ
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை கோட்டமலை பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது.
இந்தப்பகுதியில் ராஜ நாகங்கள் வசித்து வரும் பகுதியாக அறிவித்திருப்பதால் அவை அழியும் அபாயத்தில் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் உள்ளது. இந்த கிராமத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கோட்டமலை உள்ளது. அதிகமான உயரம் கொண்ட கோட்டமலைப் பகுதியில் நேற்று மதியம் 3 மணி அளவில் திடீரென்று தீ பற்றியது.
தொடர்ந்து மளமள வென்று தீ பரவி வருகிறது. 30 கி.மீ. தொடர்ச்சியாக மலையில் தீ பற்றி எரிகிறது. கோட்டமலை வடக்கு பகுதியில் ஏலத்தோட்டமும், தென் பகுதியில் ராஜ நாகங்கள் வசிக்கும் புதர் பகுதியாகவும் உள்ளது.
இந்தப்பகுதியில் தீ பற்றி எரிந்து வருவதால் ராஜ நாகங்களின் கதி என்ன? என்பது கேள்விக்குறியாக இருந்து வருவதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.