ஆனைமலையில் வெவ்வேறு விபத்து- வாலிபர் உட்பட 2 பேர் பலி
கோவை:
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல்பரத் (வயது 27). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தில் இருந்து ஆனைமலை ரோட்டில் சென்றார்.
அப்போது சுந்தரபுரி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராகுல்பரத் மோட்டார் சைக்கிளில் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல் பரத் பலத்த காயம் அடைந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனைமலையில் இருந்து உடுமலை ரோடு வழியாக 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மொபட்டில் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.