ஜல்லிக்கட்டில் மாடு முட்டி காயம் அடைந்த லாரி கிளீனர் பலி
சேலம்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரபாகரன் (வயது 22). லாரி கிளீனரான இவர் கடந்த 23-ந் தேதி அங்குள்ள போடி நாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை பார்க்க சென்றார்.
ஜல்லிகட்டு விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளையும், அதனை அடக்கிய வீரர்களையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு காளை அவரை குத்தி தூக்கி வீசியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதலி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பிரபாகரனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.