செய்திகள்
கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டு படகினை படத்தில் காணலாம்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி பண்டல்கள் கடத்தல்

Published On 2020-02-25 08:28 GMT   |   Update On 2020-02-25 08:28 GMT
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி பண்டல்கள் கடத்த முயற்சி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து சமீப காலமாக பீடி பண்டல்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திரேஸ் புரத்தில் இருந்து பீடி பண்டல்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு நாட்டு படகில் 33 பண்டல்கள் கொண்ட சுமார் ஒரு டன் எடையுள்ள பீடி கட்டுகளை இலங்கைக்கு கடத்த முயன்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டு படகையும், ரூ.2½ லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நாட்டுப்படகின் உரிமையாளர் நாகூர் மற்றும் கதிர் சுல்தான் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News