சிங்கை அருகே குளத்தில் மூழ்கி நாட்டு வைத்தியர் பலி
சிங்கை:
நெல்லை மாவட்டம் சிங்கை அருகே ஆறுமுகம்பட்டியை சேர்ந்தவர் தங்கையா (வயது 57). தனியார் மில்லில் தொழிலாளியாக வேலைபார்த்து தற்போது இவர் பழைய ரேஷன் கடை தெருவில் கை, கால் முறிவு மற்றும் சுளுக்குகளுக்கு வைத்தியம் பார்க்கும் நாட்டு வைத்தியராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது அங்கு துணிகளை துவைத்துவிட்டு பின்னர் குளிக்க சென்றார். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற போது மூழ்கியுள்ளார். இந்நிலையில் குளிக்க சென்றவர் வெகு நேரமாக வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கையாவை தேடினர். எனினும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என கருதிய அவரது குடும்பத்தினர் வி.கே. புரம் போலீசார் மற்றும் அம்பை தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் குளத்தில் இறங்கி தங்கையாவை தேடினர். எனினும் அவர் கிடைக்கவில்லை. இரவு வெகு நேரமானதால் தேடும் பணியை நிறுத்திய தீயணைப்பு நிலைய வீரர்கள் இன்று காலை தேடும் பணியில் ஈடுபடுவதாக கூறி சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் தங்கையாவை தேடுவதற்காக வந்தனர் அப்போது குளத்தின் கரையில் தங்கையா பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.