திருப்பத்தூரில் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் 700க்கும் மேற்பட்ட பெட்ரோல் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. திருப்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புதுப்பேட்டை வரை பெட்ரோல் ஆட்டோக்களை இயக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிவன்அருள் தடை விதித்தார்.
இதனால் கடந்த 15 நாட்களாக இந்த சாலையில் பெட்ரோல் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதையடுத்து பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை வரை பெட்ரோல் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்கக் கோரி கலெக்டர் சிவன் அருளிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர்.
மனுவை பெற்ற கலெக்டர் சிவன்அருள் நீங்களே ஒரு குழுவை அமைத்து டி.எஸ்.பி.யிடம் மனு அளிக்கும்படி அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் பெட்ரோல் ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பத்தூரில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. பழைய பஸ் நிலையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி அங்கு வந்தார். அவரை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கிருஷ்ணகிரி சாலையில் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அப்போது அமைச்சர் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத் திடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் உரிய நேரத்திற்கு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.