செய்திகள்
கொள்ளை

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2020-02-22 10:06 GMT   |   Update On 2020-02-22 10:06 GMT
மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:

மதுரை மாடக்குளம் மீனாட்சி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 58). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.

முருகேசன் சிவராத்திரியை முன்னிட்டு குராயூரில் உள்ள குலதெய்வத்தை வழிபடுவதற்காக நேற்று காலை குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். அப்போது யாரோ மர்மநபர்கள் பட்டப்பகலில் பின்கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் அங்கு இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1.40 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த நிலையில் முருகேசன் குடும்பத்தினர் நேற்றுமாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதும், 2 பீரோக்களில் இருந்த தங்க நகைகள், பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் கைரேகை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது தெருமுனை வரை ஓடிச்சென்று நின்று விட்டது. மாடக்குளம் மீனாட்சிநகரில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News