செய்திகள்
ஏரி

சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது

Published On 2020-02-22 07:33 GMT   |   Update On 2020-02-22 07:33 GMT
கிருஷ்ணா தண்ணீர் கிடைத்ததால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது, மேலும் 4 ஏரிகளிலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் வருகிற கோடை காலத்தை சமாளிக்க கூடிய அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

மேலும் ஆந்திரா மாநிலம் 1000 மில்லியன் கன அடி தண்ணீரை கூடுதலாக திறந்து விடுவதால் அடுத்த 6 மாதத்துக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் மூலம் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை என்றாலும் ஓரளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது.

தற்போது சென்னைக்கு கடல் நீர் குடிநீர் திட்டம், வீராணம் ஏரி போன்றவை கை கொடுத்து வருகிறது. 4 ஏரிகளில் இருந்தும் தினமும் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது.

வரும் கோடை காலத்துக்கு தேவையான தண்ணீர் இருப்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது:-

சென்னை நகரின் குடிநீர் தேவையை கோடையில் சமாளிக்க போதுமான தண்ணீர் உள்ளது. மேலும் ஆந்திர அரசிடம் தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் 8 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.

அதனை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 700 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த ஆண்டு பருவமழை ஆந்திர பகுதியில் நன்கு பெய்ததால் சோமசீலா, ஸ்ரீசைலம், கண்டலேறு அணைகள் நிரம்பி உள்ளன.

அவர்களது சொந்த தேவை பாதிக்கப்படாத சூழ்நிலையில் 54 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தற்போது 350 முதல் 400 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

நேற்று 350 மில்லியன் கன அடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. இதனால் கோடையில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் இன்னும் நீர் வரத்து அதிகரித்து 4 ஏரிகளிலும் நீர் மட்டம் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News