செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
தேன்கனிக்கோட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனம் திருடிய வாலிபரை கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேனிக்கோட்டையை அடுத்துள்ள ஜெகதேரி அள்ளிகப்பல்வாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது55). இவர் தனது இருசக்கர வாகனத்தை நேற்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வரும்போது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இருசக்கர வாகனத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் கொரட்டகிரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது22) என்பதும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சக்திவேல் என்பவரிடம் இருந்து திருடியதும் தெரியவந்தது. உடனே கார்த்திக்கை கைது செய்தனர்.