செய்திகள்
நீச்சல் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்

நாமக்கல்லில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி

Published On 2020-02-12 18:24 GMT   |   Update On 2020-02-12 18:24 GMT
நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 1,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் பாச்சல் பாவை என்ஜினீயரிங் கல்லூரியில் தொடங்கியது. இதையொட்டி அங்குள்ள மைதானத்தில் ஜூடோ, குத்துச்சண்டை, கூடைப்பந்து, கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

2-வது நாளான நேற்று நாமக்கல்லில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டியும் நடந்தது. இந்த போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி தொடங்கி வைத்தார். ஸ்ட்ரோக், பட்டர்பிளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருபாலருக்கும் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோல் நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஆண்களுக்கு 100, 200, 400, 1,500 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளும் பெண்களுக்கு 100, 200, 800, 1,500 மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 1,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடங்களை பிடித்த நபர்களுக்கு ரூ.1,000, 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.750, 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.500 பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News