செய்திகள்
பாஜக ஆட்சியில் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆபத்து- மு.க.ஸ்டாலின்
மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை, இட ஒதுக்கீடு கோருவதற்கு அடிப்படை உரிமை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருந்தன.
இதனை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி.,எஸ்டி இடஒதுக்கீட்டு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல்- சமூகநீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.