செய்திகள்
திருமாவளவன்

கோவையில் நாளை சாதி ஒழிப்பு மாநாடு- திருமாவளவன் பங்கேற்பு

Published On 2020-02-08 10:03 GMT   |   Update On 2020-02-08 10:03 GMT
கோவையில் நாளை நடைபெற உள்ள சாதி ஒழிப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார்.
கோவை:

பெரியார் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 100 அமைப்புகள் சார்பில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஓழிப்பு மாநாடு கோவையில் நாளை நடத்தப்படுகிறது.

கோவை வி.கே.கே மேனன் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து வ.உ.சி. மைதானத்தில் மாநாடு நடத்த முடிவு செய்து இருந்தனர். இதற்காக அந்த இயக்கங்கள் சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த இயக்கங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கோவை போலீசாரிடம் பேசி முடிவு எடுத்து கொள்ளுங்கள் என கூறினார்.

இதனை தொடர்ந்து கோவை போலீசாரிடம் மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் அனுமதி வழங்கினார்கள். ஆனால் கோவை வ.உ.சி. மைதானத்திற்கு பதில் மகளிர் பாலிடெக்னிக் சாலையில் மாநாடு நடத்தி கொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர்.

மேலும் வி.கே.கே. மேனன் சாலையில் இருந்து ஊர்வலம் புறப்படுவதற்கு பதிலாக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான இடத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பங்கேற்கிறார். எனவே இந்த மாநாடு, பேரணியில் மேற்கு மண்டலங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார நிர்வாகிகள் நீல சட்டையுடன் கலந்து கொள்ளுமாறு முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் கோவை குமணன், வக்கீல் துரை இளங்கோ ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News