செய்திகள்
பலியான பெண்

மருதமலை முருகன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி

Published On 2020-02-08 09:49 GMT   |   Update On 2020-02-08 09:49 GMT
கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடவள்ளி:

கோவை மருதமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

இதனையொட்டி இன்று காலை சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணமும், மதியம் தேரோட்டமும் நடைபெற்றது.

இதை காண்பதற்காக இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தனர்.

இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

அப்போது வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி வரிசையில் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் செந்தாமரை(வயது 52). இவர் இன்று காலை தைப்பூச திருவிழாவை காண மருதமலைக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து நடைபாதை வழியாக கோவிலுக்கு நடந்து சென்றார்.

நடைபாதையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கிய செந்தாமரை திடீர் என மயக்கம் போட்டு விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருதமலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News