செய்திகள்
குரூப்-4 தேர்வு மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
குரூப்-4 தேர்வு மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 தேர்வு மோசடி வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. பேஜிக் பேனா, நடுவழியில் வேனை நிறுத்தி விடைத்தாள் திருத்தம் என்று சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த மோசடி சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டு குறுக்கு வழியில் தேர்வான 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இந்தநிலையில் குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 25-ந்தேதி வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன், பள்ளி கல்வித்துறை ஊழியர், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், கூரியர் நிறுவன ஊழியர் கல்யாணசுந்தரம் ஆகிய 2 பேரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.