நாகர்கோவிலில் 30-ந் தேதி திருமணம் நடக்க இருந்த மணப்பெண் நகையுடன் மாயம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 52). இவரது மகள் நிஷாந்தினி (25). இவர் ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நிஷாந்தினிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அவருக்கு வருகிற 30-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.
திருமண வேலைகளை பெற்றோர் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த நிஷாந்தினி திடீர் என மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை. இந்த நிலையில் வடசேரி போலீஸ் நிலையத்தில் நிஷாந்தினியின் தந்தை ஜெயசீலன் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது மகள் நிஷாந்தினிக்கு வருகிற 30-ந் தேதி திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் 10 பவுன் நகையுடன் மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தருமாறு அந்த மனுவில்கூறி இருந்தார். இதையடுத்து வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் வழக்கு பதிவு செய்து மாயமான மணப்பெண்ணை தேடி வருகிறார்.