செய்திகள்
கோப்பு படம்

திருச்செங்கோடு அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி - டிரைவர் கைது

Published On 2020-01-25 16:03 GMT   |   Update On 2020-01-25 16:03 GMT
திருச்செங்கோடு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே கூத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 47). மூட்டை தூக்கும் தொழிலாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்செங்கோட்டில் இருந்து குமாரபாளையத்திற்கு சரக்கு ஆட்டோவில் பின்னால் அமர்ந்து கொண்டு ரவி சென்றார். சரக்கு ஆட்டோவை விஜயகுமார் (25) என்பவர் ஓட்டினார்.

திருச்செங்கோடு அருகே கீழேரிப்பட்டி என்ற பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற ரவி இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விஜயகுமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான தொழிலாளி ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டிரைவர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News