செய்திகள்
தற்கொலை

புதுக்கடை அருகே போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை

Published On 2020-01-24 10:02 GMT   |   Update On 2020-01-24 10:02 GMT
புதுக்கடை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போலீஸ் ஏட்டு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக் காடை சேர்ந்தவர் கிருஷ்ணமணி (வயது 38). இவர் நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு லீனா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கிருஷ்ணமணி சில நாட்கள் வேலை முடிந்தபிறகு தனது வீட்டிற்கு சென்று விடுவார். வேலை அதிகமாக இருக்கும்போது ஆயுதப்படையில் உள்ள குடியிருப்பிலேயே தங்கிவிடுவதும் உண்டு.

இந்த நிலையில் 5 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு போலீஸ்காரர் கிருஷ்ணமணி தனது வீட்டிற்கு சென்றிருந்தார். இன்றுடன் அவரது விடுமுறை முடிகிறது.

நேற்று மாலை கிருஷ்ண மணி வீட்டில் இருந்தார். அவரது மனைவி லீனா, பள்ளிக்கூடத்திற்கு தனது பிள்ளைகளை அழைத்துவரச் சென்று விட்டார். அவர் மீண்டும் வீடு திரும்பிய போது கிருஷ்ணமணி மாயமாகி இருந்தார்.

கணவர் வெளியில் கடைக்குச் சென்றிருப்பார் என்று அவரது மனைவியும் நினைத்து விட்டார். ஆனால் இரவு நீண்டநேரம் ஆகியும் போலீஸ்காரர் கிருஷ்ணமணி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லீனா கணவர் மாயமானது பற்றி புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான போலீஸ்காரர் கிருஷ்ணமணியை தேடி வந்தனர். மேலும் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் அவரை தேடினார்கள். அப்போது இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு வாழைத் தோப்பில் கிருஷ்ணமணி வி‌ஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

உடனே இந்த தகவல் புதுக்கடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீஸ்காரர் கிருஷ்ணமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கிருஷ்ணமணி உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்ததும் ஆனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குணமடையாததால் மனமுடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News