நாங்குநேரி அருகே விவசாயியிடம் பணம் பறிப்பு
களக்காடு:
களக்காடு வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 43). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது நண்பர் களக்காடு கீழத்தெருவை சேர்ந்த முத்துவுடன் நாங்குநேரி சென்றார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் பைக்கில் களக்காடு வந்து கொண்டிருந்தனர். தெற்கு நாங்குநேரி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே வந்த போது பிரேம்குமார் பைக்கை நிறுத்தி விட்டு செல்போன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சாமிதுரை என்பவர் பிரேம்குமாரிடம் பொங்கல் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பிரேம்குமார் மறுத்ததால் அரிவாளை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சாமிதுரையை தேடி வருகின்றனர்.