திருப்புல்லாணி ஒன்றியத்தில் சுயேட்சை கவுன்சிலரை கடத்த முயற்சி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 14 கவுன்சிலர் இடங்களில் தி.மு.க. 5, அ.தி.மு.க. 5, காங்கிரஸ் 1, சுயேட்சை 3 பேர் வெற்றி பெற்றனர்.
தி.மு.க.5 மற்றும் காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றி பெற்றதால் யூனியனை கைப்பற்ற தி.மு.க. வினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 3 சுயேட்சை கவுன்சிலர்களில் ஒருவர் தி.மு.க.வுக்கும், மற்றொருவர் அ.தி.மு.க. வுக்கும் ஆதரவு அளித்தனர். இதனால் திருப்புல்லாணி ஒன்றியத்தில் தி.மு.க.வின் பலம் 7 ஆகவும், அ.தி.மு.க. வின் பலம் 6 ஆகவும் இருந்தது.
இன்று திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
2 கட்சிக்கும் ஆதரவு அளிக்காத சுயேட்சை கவுன்சிலர் சிவலிங்கம் என்பவர் பதவியேற்ற பின் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த அவரை சிலர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்த முயற்சி செய்தனர்.
இதைப்பார்த்த தி.மு.க. வினர் உடனே சிவலிங்கத்தை கடத்த விடாமல் தடுத்தனர். இதனால் தி.மு.க.வினருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த கீழக்கரை டி.எஸ்.பி. முருகே சன் மற்றும் போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
அ.தி.மு.க. திருப்புல்லாணி யூனியனை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சுயேட்சை கவுன்சிலரை கடத்த முயன்றதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.