உடன்குடியில் எலெக்ட்ரிக்கல் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள கொட்டங்காட்டை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல சங்க தலைவராக உள்ளார். இவரது மகன் பிரசாந்த் (வயது 35). இவர் உடன்குடி பேருந்துநிலையத்தில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். பிரசாந்த் நேற்றுஇரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார்.
இந்நிலையில் இன்று காலை அவர் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் கேமிரா பதிவுகள், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், சந்திரசேகர் மற்றும் பிரசாந்தின் செக்புக் மற்றும் கடை சம்பந்தமான ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பின்னர் பிரசாந்த் குலசேகரபட்டிணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.