செய்திகள்
மரணம்

பவானி ஆற்றில் ஜீப் கவிழ்ந்து விபத்து- கேரள பெண் வன அதிகாரி பலி

Published On 2020-01-02 10:39 GMT   |   Update On 2020-01-02 10:39 GMT
பவானி ஆற்றில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் கேரள பெண் வன அதிகாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பெருந்தல் மண்ணா கோ- ஆபரேட்டிவ் பகுதியை சேர்ந்தவர் வினோத் பாண்டியராஜ். மத்திய கலால் துறை அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி சர்மிளா ஜெயராம். இவர்களுக்கு 4 வயதில் ரையனீஸ் என்ற மகன் உள்ளார். சர்மிளா அட்டப்பாடி வனச்சரகத்தில் வன அலுவலராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சர்மிளா முக்காலியில் இருந்து செம்மனூரில் உள்ள அலுவலகத்திற்கு ஜீப்பில் சென்றார். ஜீப்பை உபைது என்பவர் ஓட்டி சென்றார். ஜீப் செம்மனூர் பவானி ஆற்றுப்பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

இதில் ஜீப்பில் இருந்த 2 பேரும் வெளியில் வரமுடியாமல் தவித்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து டிரைவர் உபைதுவை மீட்டனர். ஆனால் சர்மிளாவை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சர்மிளாவையும் மீட்டனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த அவர்கள் 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்தல்மன்னா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ந் தேதி டிரைவர் உபைது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வன அலுவலர் சர்மிளா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சர்மிளா சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முக்காலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News