செய்திகள்
ஆறுமுகநேரி அருகே பாம்பு கடித்து வியாபாரிகள் சங்க நிர்வாகி பலி
ஆறுமுகநேரி அருகே விஷப்பாம்பு கடித்து வியாபாரிகள் சங்க நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே உள்ள லெட்சுமி மாநகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேர்மலிங்கம்(வயது 71). இவரது மனைவி நட்டார்கனி. இவர்களுக்கு 6 மகன்கள் மற்றும் 3 மகள்கள். இதில் கடைசி மகனை தவிர அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
சேர்மலிங்கம் தற்போது சாத்தான்குளம் அருகே மெயின்ரோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி ஓட்டலில் சமையல் வேலைக்கு அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த விறகுகளை எடுத்தார். அப்போது அதில் இருந்த விஷப்பாம்பு ஒன்று அவரது கையில் கடித்தது.
இதையடுத்து மயங்கி கீழே விழுந்த அவரை உடனடியாக அவரது மகன் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக் குடி அரசு மருத்துவமனையில் சேர்மலிங்கம் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக சேர்மலிங்கம் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த சேர்மலிங்கம் ஆறுமுகநேரி வியாபாரிகள் சங்க துணைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.