செய்திகள்
போலீசார் விசாரணை

பள்ளிபாளையம் அருகே பா.ம.க. நிர்வாகி அடித்து கொலை?- போலீசார் விசாரணை

Published On 2019-12-28 11:17 GMT   |   Update On 2019-12-28 11:17 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பா.ம.க. நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள வெப்படையை அடுத்த ரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கின்ற மணிமாறன் (வயது 35) பா.ம.க. நிர்வாகி. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் போன் வந்தது. அதையடுத்து அவர் மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடினர். இதையடுத்து இன்று காலை அங்குள்ள கல்குவாரி அருகில் அவரது செருப்பும் பைக்கும் நின்றது. அருகில் ரத்த கறையும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து குமாரபாளையம் போலீசில் தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குவாரியில் இறங்கி தேடினர். அங்கு அவரை பிணமாக மீட்டனர். பின்னர் உடலை பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் செல்போனில் யார் - யாரெல்லாம் பேசியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரமேஷ் என்கின்ற மணிமாறன் சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் வெப்படை பஸ்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News