செய்திகள்
தீ (கோப்புப்படம்)

வியாசர்பாடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் எரிந்து நாசம்

Published On 2019-12-28 10:40 GMT   |   Update On 2019-12-28 10:40 GMT
வியாசர்பாடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசமடைந்தது. தீ விபத்தில், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.
ராயபுரம்:

வியாசர்பாடி மேக்சின் புரத்தை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய தம்பி தாஸ். இருவரும் டிரைவர்கள்.

இருவருடைய வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன. இன்று காலை 6 மணிக்கு ராஜூவும், தாசும் வேலைக்கு சென்று இருந்தனர். இரண்டு பேரின் மனைவிகளும் கோவிலுக்கு சென்றுவிட்டனர். ராஜூ வீட்டில் அவரது மகள் மீனா (20) இருந்தார்.

இந்த நிலையில் அங்கிருந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து கரும்புகை எழுந்தது. உடனே மீனா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது சிலிண்டர் வெடிச்சத்தம் கேட்டது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் 2 வீட்டின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் தீப்பற்றி எரிந்தன.

தகவல் அறிந்ததும் வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 2 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தன. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. 10 பவுன் தங்க நகையும் சேதம் அடைந்தது. வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News