செய்திகள்
கரூரில் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு
கரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப் பாளையம்,வேட்டமங்கலம், ஒரம்பு பாளையம், நல்லிக்கோவில் திருக்காடு துறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை பயிரிட்டு உள்ளனர். இதில் விளையும் தேங்காய்களை உடைத்து அதில் உள்ள தேங்காய்பருப்புகளை உலர வைத்து சாலைப் புதூரில் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். ஏலம் எடுக்க தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் அதேபோல் எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர்.
மேலும் வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கின்றனர். கடந்தவாரம் 100 கிலோ கொண்ட ஒருமூட்டை தேங்காய் பருப்பு ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கி சென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு ரூ.9600-க்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய்பருப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.