செய்திகள்
வெங்காயம்

வெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்

Published On 2019-12-10 05:25 GMT   |   Update On 2019-12-10 05:25 GMT
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக திருமண வீட்டில் நூதன சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவற்றை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருவதுடன், மதிப்புமிக்க பொருளாகவும் கருதி பாதுகாத்து வருகின்றனர்.

சமையலில் முக்கிய இடத்தை பிடித்த வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்து கொண்டிருக்கிறது. வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்ப பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இந்நிலையில் திருமண வீட்டில் முதியவர் ஒருவர் வெங்காயத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

உடன்குடியில் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அங்கு மதிய உணவுக்காக சமையல் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருமண வீட்டின் உறவினரான முதியவர் ஒருவர் சமையல் பணிகளை கண்காணிப்பது போன்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் துணிப்பையில் பல்லாரி, வெங்காயம் ஆகியவற்றை திருடி விட்டு, அங்கிருந்து நழுவ முயன்றார். இதை பார்த்த சமையல்காரர் இது குறித்து திருமண வீட்டாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த முதியவரிடம் துணிப்பையில் இருந்த பல்லாரி, வெங்காயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த முதியவர் அங்கிருந்து சென்று விட்டார்.

நகை, பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருமண வீட்டில் வெங்காயம் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News