செய்திகள்
கோப்புப்படம்

மதுரையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.22 லட்சம் மோசடி- 3 பேர் மீது வழக்கு

Published On 2019-12-09 11:29 GMT   |   Update On 2019-12-09 11:29 GMT
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம் பட்டியை அடுத் துள்ள கருமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை தெற்கு வெளி வீதி காஜா தெருவைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். அப்போது எனது மகனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகவும், பணம் செலவாகும் எனவும் கூறினார்.

இதை நம்பி பல தவணைகளில் ரூ.22 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட பின் வேலையும் வாங்கித் தர வில்லை. பணத்தை கேட்ட போது தர மறுத்து விட்டார்.

இதற்கு உடந்தையாக அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த பாலமுருகன், அவரது தாய் மலர் ஆகியோர் உள்ளனர். 3 பேரிடம் இருந்தும் பணத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News