திருவட்டார் அருகே மனைவி- மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
நாகர்கோவில்:
திருவட்டாரை அடுத்த பள்ளிக்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்(வயது60). தொழிலாளி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி மற்றும் மகன் இறந்து விட்டனர். இதில் மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார்.
மேலும் அவர் யாரிடமும் பேசாமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்கு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.