செய்திகள்
உடல் கருகிய வாலிபர்

சேலம் அருகே பரபரப்பு - உடலில் எரிந்த தீயுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபர் உயிருக்கு போராட்டம்

Published On 2019-11-23 14:16 GMT   |   Update On 2019-11-23 14:16 GMT
சேலம் அருகே உடலில் எரிந்த தீயுடன் மோட்டார்சைக்கிள் ஒட்டிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் பொட்டியபுரம் காலனியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 24). கேண் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் இன்று காலை ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பிரிவு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது உடலில் தீப்பிடித்து எரிந்த படி இருந்தது. ஆனாலும் அவர் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய படி சென்றார்.

இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர் ஆஸ்பத்திரிக்குள் சென்று சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 108 ஆம்பபுலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

90 சதவீதம் உடல் கருகிய நிலையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதம் அடையவில்லை என்பதால் அவரே தீக்குளித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அதனை ஓட்டி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றதாகவும், தீக்காயம் ஏற்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற போது சிகிச்சை அளிக்க மறுத்ததால் பண்ணப்பட்டி பகுதியில் உள்ள கிளீனிக்கிற்கு வந்ததாகவும் கூறி உள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News