செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

பொள்ளாச்சி அருகே பள்ளி வேன்மோதி சிறுவன் பலி

Published On 2019-11-23 10:49 GMT   |   Update On 2019-11-23 10:49 GMT
பொள்ளாச்சி அருகே பள்ளி வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் வீரதர்மராஜ்(வயது 37). விவசாயி. இவரது மனைவி லாவண்யா(31). இவர்களது மகன் சஸ்வந்த்(5). இவன் அந்த பகுதியில் உள்ள அங்கன் வாடியில் படித்து வந்தான். நேற்று காலை சிறுவன் சஸ்வந்த் தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் ஒன்று கோட்டூர் நோக்கி அந்த வழியாக வந்தது. பொங்காளியூர் அருகே வந்தபோது திடீரென்று பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சஸ்வந்த் மீது மோதியது.

இதில் சிறுவன் சஸ்வந்த் மீது வேன் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பள்ளி வேனை ஓட்டி வந்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(63) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இறந்த சஸ்வந்த் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை வாங்கி கொண்டு ஊருக்கு சென்று தகனம் செய்தனர்.

தாங்கள் பெற்ற ஒரு மகனும் வேன் மோதி உயிரிழந்ததால் சஸ்வந்த்தின் பெற்றோர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:    

Similar News